Sunday, 11 March 2012

விசயநகர் - நாயக்கர் காலம்

 விசயநகர் - நாயக்கர் காலம்
விசயநகரப் பேரரசர்கள் காலத்துச் செப்புத் திருமேனிகள் தமிழகக் கோயில்களில் கிடைக்கின்றன. நாகை மாவட்டம் திருக்கடவூரில் சிவபெருமான் கால சம்ஹாரம் செய்ததாகக் கதை ஒன்று சொல்லப்பட்டு வருகின்றது. இதற்கு ஏற்றாற் போல் விசய நகர ஆட்சிக் காலத்தில் பிரமாதமான கால சம்ஹார மூர்த்தியின் செப்புப்     படிமம் ஒன்று அமைக்கப்பட்டது. திருப்பதியில் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது தேவியரின் உயரமான படிமங்கள் இருப்பது போன்று காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் அரசர், அரசியர் செப்புப் படிமங்கள் வணங்கிய     நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. நாயக்கர் காலத்தில் நடராசர் சிற்பங்கள் அமைக்கப் பட்டதோடு, அதற்காகப் பிரதானக் கோயிலுக்குள் தனிச்     சன்னதியும் அமைக்கப்பட்டது. வேலூர் என்ற இடத்தில் கி.பி.115இல் செய்விக்கப் பட்ட நடராசர் திருமேனி சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. திருவரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் திருமேனி இக்காலத்தில் செய்விக்கப் பட்டபோதும் இதில் சோழர் கலையின் வேலைப்பாடுகள் பின்பற்றப் பட்டன. இராமன்,     இலக்குவன், சீதை, அனுமன் செப்புத் திருமேனிகள் பல கோயில்களில் செய்து வைக்கப் பெற்றன. கிருஷ்ணரது     உருவங்கள் செய்விக்கப் பட்டன. பல கோயில்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருக்குச் செப்புத்     திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. நாயக்கர் காலத்துக் காரைக்கால் அம்மையாரின் படிமம் ஒன்று கான்சாஸ் நகரத்தில் நெல்சன்- அட்கின்ஸ் கலைக்கூடத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் புத்தர் மற்றும் போதி சத்துவர் படிமங்கள் செய்விக்கப் பட்டன. நாயக்க மன்னர்களின் படிமங்களும் செய்யப்பட்டன. தஞ்சைக் கலைக் கூடத்தில் தஞ்சையை ஆண்ட விசய ராகவ நாயக்கரின் உருவச் சிலை உள்ளது.
 
சோமாஸ்கந்தர் திருமேனி